Followers

Thursday, July 17, 2014

கிரகங்களுக்கு சாந்தி


வணக்கம் நண்பர்களே!
                    நிறைய விசயங்களை நான் உங்களிடம் சொல்லவேண்டும் என்று நினைப்பேன் ஆனால் அதனை பொதுவில் எழுதகூடாது என்று ஒரு சில விதிகள் இருப்பதால் அதனைப்பற்றி எழுதுவதில்லை. அதே நேரத்தில் நான் கடுமையாக சோதனை செய்பவன். பிறர் ஒருவர் எத்தனை நாள் என்னோடு தொடர்பில் இருக்கிறார் என்று எல்லாம் பார்ப்பேன்.

ஒருவர் வந்தவுடன் அவருக்கு தேவையானவற்றை எல்லாம் எடுத்து கொடுக்க முடியாது. அவர்கள் உண்மையில் நல்லவர்களா அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைக்காக வருகிறார்களா என்று எல்லாம் பார்ப்பது உண்டு.

இந்த உலகம் ஒரு கண்ணாடி நாம் என்ன செய்தாலும் அது நம்மீது எதிர்ப்பை காட்டும். கண்ணாடியில் நின்றுக்கொண்டு நீங்கள் சிரித்தால் அது சிரிப்பது போல் காட்டும். அழுதால் அழுவது போல் காட்டும். நீங்கள் எந்த எதிர்ப்பை காட்டினாலும் அதே எதிர்ப்பு திரும்பி உங்களுக்குள் வந்துவிடும். 

ஒரு முறை இரயிலில் நான் சென்றுக்கொண்டிருக்கும்பொழுது சகபயணிகள் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். நானும் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு இளைஞர் எனது படுக்கைக்கு மேல் இருந்து கீழே இறங்கினார். இறங்கும்பொழுது எனது உடல் மேல் அவரின் கால் பட்டவுடன் நான் தூக்கத்தை விட்டு எழுந்துவிட்டேன். அவர் என்னிடம் சாரி என்றுவிட்டு எப்படி தான் தூங்குவது? இத்தனை பேர் குறட்டை விடுகிறார்கள். இந்த சத்தத்தில் நான் எப்படி தூங்குவது என்று புலம்பினார்.

அந்த இளைஞர் என்னிடம் எப்படி நீங்கள் தூங்குகிறீர்கள் என்று கேட்டார். இந்த குறட்டை சத்தம் எப்படி உங்களை தூங்கவிடுகிறது என்றார். அவரிடம் இந்த இரயில் ஒடும் சத்தம் வந்துக்கொண்டு இருக்கும். அதனால் இரயில் ஓடாமல் இருக்கமுடியுமா? அதுபோல் தான் இந்த குறட்டை சத்தமும். உலகம் அதுபாட்டு இயங்கிக்கொண்டே இருக்கும் அதனோடு நாம் சண்டைபோட்டால் அது நம்மீது எதிர்த்து  பாயதுவங்கும். அதனோடு ஒத்துபோனால் நாம் பாட்டுக்கு சென்றுக்கொண்டு இருக்கலாம் என்றேன். 

அவர் அப்பொழுதே தூங்க சென்றுவிட்டார். விடியற்காலையில் எழுந்தபொழுது அவர் என்னிடம் நல்ல விசயத்தை நீங்கள் எனக்கு சொன்னீர்கள் என்று நன்றி சொன்னார்.

அவரிடம் சொன்னதை தான் உங்களிடம் சொல்லுகிறேன். கிரகங்கள் அதன் வேலையை செய்துக்கொண்டே இருக்கும். அதனோடு சண்டையிட்டால் உங்களை திருப்பி அடிக்கும். அதனோடு ஒத்து சென்றால் உங்களோடு அதுவும் ஒத்து செல்லும். கிரகங்களை பார்த்து நீங்கள் பயந்தால் உங்களை அது பயமுறுத்திவிடும். அதனோடு அன்பாக செல்லும்பொழுது உங்களோடு அது அன்பாக செல்லும்.இது தான் கிரகங்களுக்கு செய்யும் முதல் சாந்தி.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: